30/04/2025
முன்னாள் ஜனாதிபதிகள் ஐவரில் நால்வர், தாங்கள் பயன்படுத்தி வந்த அதிகபட்ச வாகனங்களை தற்பொழுது ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களைத் தவிர, மற்றைய முன்னாள் ஜனாதிபதிகள் தங்களுடைய மேலதிகமான வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மூன்று வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தால் பெற்றிருந்த நிலையில், அவற்றில் ஒன்றை மீண்டும் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் டாக்டர் சனத் நந்தித குமாரநாயக்க அவர்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்பொன்றை அவர்கள் அனைவருக்கும் அனுப்பியதைத் தொடர்ந்தே இந்த ஒப்படைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலாளரால் ஏப்ரல் 19 ஆம் திகதியன்று அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம், ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னர் அந்த வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பயன்படுத்திய லாண்ட் க்ரூசர் V8 வாகனம் கடந்த 28ஆம் திகதி, மைத்திரிபால சிறிசேன அவர்கள் பயன்படுத்திய லெக்சஸ் டிபெண்டர் வாகனம் 24ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பயன்படுத்திய லாண்ட் ரோவர் ஜீப் வாகனம் 23ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பயன்படுத்திய லாண்ட் க்ரூசர் பிராடோ வாகனம் 28ஆம் திகதி முறையே ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஒரு அமைச்சரவையின் அமைச்சருக்குக் கிடைக்கும் அரச வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதிகளும் அமைச்சரவை அமைச்சருக்கேற்ப உரிய சலுகைகள் மட்டுமே பெறத் தகுதியுடையவர்களாக இருப்பதால், அவர்களுக்கும் வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது U News முகநூல் பக்கத்தை Follow செய்யவும்.